எபோலா பாதிப்புள்ள பகுதிகளிலிருந்து வரும் பயணிகள் 21 நாட்களுக்குத் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என கனடா அரசாங்கம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
மேலும், காங்கோ, தெற்கு சூடான் மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளிலிருந்து வரும் விண்ணப்பங்கள் மீதான முடிவுகளைக் குடிவரவு அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.
கனடாவின் பொது சுகாதார முகமையின் எல்லை மற்றும் பயண சுகாதார மையத்தின் தலைமை இயக்குநர் லூக் பிரிஸ்பாய்ஸ், இந்த நடவடிக்கைகள் மிகுந்த முன்னெச்சரிக்கையாக செயல்படுத்தப்படுவதாகவும், ஆகஸ்ட் 29 வரை அமுலில் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
அறிகுறிகள் தென்படும் பயணிகள் மேலதிக மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்படுவார்கள். சனிக்கிழமை முதல் கடுமையான எல்லை நடவடிக்கைகள் அமுல்படுத்தப்படுகின்றன, மேலும் தனிமைப்படுத்திக்கொள்ள இடமில்லாதவர்களுக்கு உரிய இடம் வழங்கப்படும்.
இதனிடையே, புதன்கிழமை முதல், பாதிக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களின் குடிவரவு விண்ணப்பங்கள் மீதான இறுதி முடிவுகளை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக கனடிய அதிகாரிகள் தெரிவித்தனர்; இருப்பினும், நோய்ப் பரவலின் போக்கைப் பொறுத்து இந்த இடைநிறுத்தம் நீட்டிக்கப்படலாம் அல்லது நீக்கப்படலாம்.
இந்தத் திடீர் நோய் பரவல் வடகிழக்கு காங்கோவை மையமாகக் கொண்டுள்ளது; இது, மீட்பு முயற்சிகளை விஞ்சிச் செல்லும் வேகத்தில் பரவும் ஒரு அரிய வகை தொற்றாகும்.
900-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு, 220-க்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்துள்ள நிலையில், நிவாரணப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும்; மேலும், இந்த நோய் பரவல் பல மாதங்களுக்கு நீடிக்கக்கூடும் என்றும் உலக சுகாதார முகமை தெரிவித்துள்ளது.
