உக்ரைனுக்கு எதிரான நான்கு ஆண்டுகளுக்கும் மேலான போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா மீது அழுத்தத்தை தீவிரப்படுத்த ஜி7 தலைவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த நிலையில், ரஷ்யா “ஒரு உடன்பாட்டை எட்ட வேண்டும்” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறினார்.
முதலாம் உலகப் போரை விட நீண்ட காலமாக நீடித்து வரும் ஒரு மோதலில், போர்க்களத்தில் உக்ரைன் சிறப்பாக செயல்படுவதாக கருதப்பட்டாலும், அதன் நகரங்கள் இன்னும் கொடிய ரஷ்ய தாக்குதல்களின் இலக்காக இருந்துவருகிறது. இந்த நிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பிரான்சின் எவியான்-லெஸ்-பெய்ன்ஸ் என்ற சுற்றுலா தலத்தில் நடைபெற்ற உச்சிமாநாட்டில் கலந்துகொண்டார்.
உலக வல்லரசுகளின் ஜி7 குழுவின் உச்சிமாநாடு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் நல்லுறவை ஏற்படுத்த முயன்றும், மாஸ்கோ மீது பொறுமையை இழப்பதற்கான அறிகுறிகளை காட்டியும் வந்த டிரம்பை, ஜெலென்ஸ்கிக்கு குறிப்பிடத்தக்க வகையில் நேருக்கு நேர் சந்திக்க வைத்தது.
“எரிவாயு மற்றும் எண்ணெய் மீதான தடைகள் மூலம் ரஷ்யா மீதான அழுத்தத்தை அதிகரிக்க தலைவர்கள் இன்று முடிவு செய்தனர்,” என பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஒரு பிரெஞ்சு தூதரக வட்டாரம் தெரிவித்தது.
“உக்ரைனுக்குப் பயனளிக்கும் ஒரு கள நிலவரம் உள்ளது” என்பதைத் தலைவர்களும் ஒப்புக்கொண்டனர் என, பெயர் குறிப்பிட விரும்பாத அந்த வட்டாரம் மேலும் கூறியது.
