News

சூடான்: ராணுவம் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 35 பேர் பலி

 

வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு சூடான் . அந்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார்.

அவருக்கு அடுத்த நிலையில் ஆட்சியின் துணைத்தலைவராக துணை ராணுவப்படையின் தளபதியான ஜெனரல் முகமது ஹம்டன் டகலோ செயல்பட்டு வருகிறார்.

இதனிடையே, துணை ராணுவத்தின் படைப்பிரிவுகளில் ஒன்றான அதிவிரைவு ஆதரவு படையினரை ராணுவத்துடன் இணைக்க ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் முயற்சி மேற்கொண்டார். இதற்கு துணை ராணுவப்படையின் அதிவிரைவு ஆதரவு படையினர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது.

இதனால், ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி முதல் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. துணை ராணுவம் கட்டுப்பாட்டில் இருந்த தலைநகர் கார்டூமினை கடந்த மார்ச் மாதம் ராணுவம் கைப்பற்றியது. அதேவேளை, ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. இந்த மோதலில் அப்பாவி பொதுமக்களும் உயிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில், சூடானின் வடக்கு டர்பர் மாகாணம் ஹர அல் சவியா கிராமம் துணை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கிராமத்தில் நேற்று மதியம் கிராம பஞ்சாயத்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அப்போது, ராணுவம் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்த டிரோன் தாக்குதலில் கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் 35 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top