உக்ரைன்(Ukraine) எதிர்கொண்டு வரும் ரஷ்யாவின்(Russia) தாக்குதல்களின் பின்னணி தற்போது மாறியுள்ளதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.
ஆரம்பத்தில், நேட்டோவில் இணைய உக்ரைனின் முயற்சியே போருக்கான முக்கிய காரணமாக இருந்தது, ஆனால் தற்போது, உக்ரைனின் பெரும்பகுதிகளை கைப்பற்றுவதுதான் ரஷ்யாவின் நோக்கமாக இருக்கின்றது என தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்யா, டினிப்ரோ நதிக்கு கிழக்கே உள்ள பகுதிகளை ஆக்கிரமிப்பதன்மூலம் உக்ரைனை கடலுக்கான அணுகல் இல்லாத ஒரு நிலநாடாக மாற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் மூலம் கருங்கடலிலிருந்து உக்ரைன் துண்டிக்கப்பட்டு, அதன் கடல் வர்த்தகத்தின் மீது ரஷ்யா நேரடி பாதிப்பை ஏற்படுத்த முடியும்.
உக்ரைனின் முக்கிய பொருளாதாரக் குறுக்கு வழியாக விளங்கும் டினிப்ரோ நதிக்குப் பக்கமாக உள்ள நிலங்கள், ரஷ்யாவின் இராணுவக் குறிக்கோள்களில் முக்கிய இடம் பெற்றுள்ளன.
உக்ரைனின் மொத்த பரப்பளவு சுமார் 6.03 லட்சம் சதுர கிலோமீட்டர். இதில், 3.36 லட்சம் சதுர கிமீ பகுதியை கைப்பற்றும் நோக்குடன் ரஷ்யா செயல்படுகிறது என கூறப்படுகிறது.
உக்ரைன் ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்ட தகவலின்படி, இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் மாநிலங்களை முழுமையாகக் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் திட்டத்தில் ரஷ்யா இருப்பதாகவும், மேலும் வடக்கு உக்ரைனையும் ஆண்டு முடிவுக்குள் கைப்பற்ற முயற்சிக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒடெசா மற்றும் மைக்கோலைவ் நகரங்களை கைப்பற்றும் முயற்சியின் மூலம், உக்ரைன் தனது கடல் வர்த்தகத்தை முற்றிலுமாக இழந்து, ரஷ்யாவை நம்ப வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் அபாயம் உள்ளதாக உக்ரைன் தரப்பினர் எச்சரிக்கின்றனர்.
இராணுவ நடவடிக்கைகளுக்குப் பிறகு, பொருளாதார அழுத்தம் மூலம் உக்ரைனை சிக்கல்களில் மாட்ட வைக்கும் முயற்சியிலும் ரஷ்யா ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.