காசா உதவி மையத்தின் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேல் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாலஸ்தீனியர்கள் 38 பேர் கொல்லப்பட்டனர்.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மீது, காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, 2023ம் ஆண்டு அக்டோபரில் தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து, ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. காசாவில் பல்வேறு இடங்களில் இஸ்ரேல் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று (ஜூன் 16) காசாவில் உதவி மையம் அருகே இஸ்ரேல் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 38 பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச்சூட்டில் உயிர் இழந்தவர்களின் உடலை மீட்கும் பணி நடந்து வருகிறது. உதவி மையம் அருகே குவிந்து இருந்த மக்கள் மீது இஸ்ரேல் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு ஹமாஸ் படையினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மறுபுறம், இஸ்ரேல்-ஈரான் இடையே மோதல் அதிகரித்துள்ளது. இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரையில் ஈரானில் 230 பேரும், இஸ்ரேலில் குழந்தைகள் உள்பட 10 பேரும் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.