சர்வதேசத்தின், ஐந்து முன்னணி சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கிடம் இலங்கை தொடர்பில் கோரிக்கைகளை முன்வைத்துள்ளன.
பல தசாப்தங்களாக தீர்க்கப்படாத மனித உரிமை மீறல்களுக்கு சர்வதேச விசாரணையை வலுப்படுத்தவும் பொறுப்புக்கூறலைக் கோரும் வகையில், இலங்கைக்கான பயணத்தைப் அவர் பயன்படுத்தவேண்டும் என்று, குறித்த அமைப்புக்கள் கோரியுள்ளன.
சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச சட்ட வல்லுநர்கள் ஆணையகம், மனித உரிமைகள் மற்றும் மேம்பாட்டுக்கான ஆசிய மன்றம் மற்றும் அமைதி மற்றும் நீதிக்கான இலங்கை பிரசாரம் என்பன இந்த கோரிக்கையை விடுத்துள்ளன.
போர்க்குற்றங்கள், கட்டாயமாக காணாமல் போதல்கள் மற்றும் முறையான துஸ்பிரயோகங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க இலங்கை அரசாங்கங்கள்,தொடர்ந்தும் தவறி வருவது குறித்து, இந்த அமைப்புக்கள் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளன.
யாழ்ப்பாண செம்மணியை போன்ற உள்நாட்டுப் போர் உரிமை மீறல்களுடன் தொடர்புடைய வெகுஜன புதைகுழிகள் மற்றும் தெற்கில் ஜேவிபி எழுச்சியுடன் தொடர்புடைய வெகுஜன புதைகுழிகளைப் பார்வையிடவேண்டும்.
அத்துடன், சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்டத்தின் மீறல்கள் மற்றும் துஸ்பிரயோகங்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்யுமாறு, இந்த பயணத்தின்போது, இலங்கை அரசாங்கத்துக்கு உயர்ஸ்தானிகர் பகிரங்கமாக அழைப்பு விடுக்கவேண்டும் என்றும் சர்வதேசத்தின், ஐந்து முன்னணி சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.