News

முழுமையான விசாரணைக்கு பிரித்தானிய எம்.பி. கோரிக்கை

 

யாழ்ப்பாணத்தின் செம்மணி மனிதப் புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட மூன்று குழந்தைகளின் எச்சங்கள் உள்ளிட்டவை தொடர்பாக முழுமையான விசாரணைக்கு ஆதரவளிக்குமாறு பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் உமா குமரன், அந்நாட்டு அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார். செம்மணியில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மனிதப்  புதைகுழியிலிருந்து மூன்று குழந்தைகளின் உடல்கள் முதலானவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை, இலங்கையில் தமிழர்கள் மீது அரச ஆதரவுடன் நடத்தப்பட்ட அட்டூழியங்கள் ஒரு பேரழிவு தரும் நிகழ்வை நினைவூட்டுவதாக உமா குமரன் தனது சமூக இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கொடூரமான அட்டூழியத்திற்கு சர்வதேச பங்காளிகளுடன் சேர்ந்து, முழுமையான விசாரணைக்கு பிரித்தானிய அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென பிரிட்டன் வெளியுறவுச் செயலாளர் டேவிட் லாம்மிக்கு கடிதம் எழுதியுள்ளாதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த 17 ஆம் திகதி எழுதியுள்ள இக் கடிதத்தில்,  சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் 2024 ஆம் ஆண்டு அறிக்கையை குறிப்பிட்டு கூற விரும்பிகிறேன். சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப இவற்றை தோண்டியெடுப்பதற்கான போதுமான வளங்கள் இலங்கையில் இல்லை.

இந்த நடவடிக்கைகளுக்காக சர்வதேச ஆதரவைப்பெற இலங்கை அரசாங்கத்தையும் ஊக்குவிக்கின்றேன்.

உண்மை, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்கான இங்கிலாந்து அரசாங்கத்தின் அர்ப்பணிப்பில், இந்தப் பிரச்சினைக்கு இங்கிலாந்து அரசாங்கத்திடமிருந்து இலங்கைக்கு ஏதேனும் தற்போதைய மற்றும் திட்டமிடப்பட்ட ஆதரவை வழங்கினால் அதற்காக நான் நன்றியுள்ளவனாக இருப்பேன். இலங்கை அரசாங்கத்துடன் பிரித்தானிய கொண்டுள்ள ‘எந்தவொரு மற்றும் அனைத்து இருதரப்பு ஈடுபாட்டிலும்’ இந்த புதைகுழி பிரச்சினைக்கு முன்னுரிமையளிக்க வேண்டுமென வெளியுறவு அலுவலகத்திடம் கேட்டுக்கொள்கின்றேன். ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் கோரியபடி, போர்க்குற்றங்களைச் செய்தவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்ற எனது கோரிக்கையை நீங்கள் பரிசீலிப்பீர்கள் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top