News

காசாவில் தொடரும் இஸ்ரேல் தாக்குதல் – 33 பேர் பலி

 

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.

இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டுள்ளது.

பணய கைதிகளில் சிலர் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கொல்லப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி, ஹமாஸ் ஆயுதக்குழுவின் பிடியில் இன்னும் 50 பேர் பணய கைதிகளாக உள்ளனர். இதில் 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேவேளை, காசா முனையில் இஸ்ரேல் ஓராண்டுக்குமேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், காசா முனையில் இஸ்ரேல் இன்று நடத்திய தாக்குதலில் 33 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 55 ஆயிரத்து 941 ஆக அதிகரித்துள்ளது. இந்த மோதலில் இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதனிடையே, இஸ்ரேல் – ஈரான் இடையேயான மோதல் இன்று 10வது நாளாக நீடித்து வருகிறது. ஈரான் அணு உலைகள் மீது அமெரிக்கா குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளதால் மத்திய கிழக்கில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top