வடக்கு-கிழக்கில் காணப்படும் மனித புதை குழி தொடர்பில் சர்வதேச நீதிப் பொறி முறை ஊடான விசாரணை ஆரம்பிக்கப்பட்டு நீதி நிலை நாட்டப்பட வேண்டும் என வலிந்து கடத்தப்பட்டு காணாமல் போன உறவுகளின் திருகோணமலை மாவட்ட சங்க தலைவி செபஸ்டியன் தேவி தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் இன்று (27) இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
செம்மணி சிந்துப்பாத்தி மனித புதை குழியில் தற்போது வரை 70க்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த புதை குழி அகழ்வின் போது சிறுவர்களின் காப்பு ,பாதணிகள் உள்ளிட்ட பொருட்களும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இதனை இலங்கை நாட்டு அரசாங்கம் சொல்வதாவது அப்போதைய காலத்தில் கொல்லப்பட்டது தமிழர்கள் அல்ல இராணுவ படையினர் என்று பொய்யான வதந்திகளை கூறி திசை திருப்ப முனைகின்றனர் இதனை ஒரு போதும் நாம் ஏற்க முடியாது.
மனித புதை குழியில் காணாமல் போன கடத்தப்பட்டு கொலை செய்து புதைக்கப்பட்ட எமது உறவுகள் என்றே நினைத்து நெஞ்சம் பதறுகிறது. வீடு வீடாக சென்று கோடிக் கணக்கில் கப்பம் பெற்று எமது உறவுகளை இழுத்து சென்றார்கள் இதன் போது பாடசாலை மாணவர்கள்,சிறுவர்கள் என பலரும் எம் உறவுகளை தான் இப்படி செய்தார்கள்.
இதனை வெள்ளை வான் கடத்தல் மூலமாக இராணுவ புலனாய்வாளர்கள் இணைந்து கடத்தி சென்றுள்ளனர் . எனது மகனை கூட இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் இருந்து அழைத்து சென்றவர்கள் திருப்பி வரவில்லை . இவ்வாறாக இன அழிப்பு செய்துள்ளார்கள்.
இவர்களுக்கான தண்டனை சர்வதேச நீதிமன்றம் ஊடாகவே வழங்கப்பட வேண்டும். வடகிழக்கில் சுமார் 22 மனித புதை குழிகள் காணப்படுவதாக கூறுகின்றனர். இந்த புதை குழி விசாரணைகளை சர்வதேச நிபுணர்களை கொண்டு ஆய்வு செய்யப்பட வேண்டும் ஏன் எனில் எம் பிள்ளைகள் அங்கு புதைக்கப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.
குறிப்பாக வடகிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் காணாமல் போன உறவுகளை தேடி போராடிய தாய்மார்கள் 300க்கும் மேற்பட்டோர்கள் இறந்துள்ளார்கள் இதற்கான நீதி கூட எமக்கு கிட்டவில்லை. கிழக்கில் திருகோணமலை,மட்டக்களப்பு,அம்பாறை போன்ற மாவட்டங்களிலும் விசேடமாக வெள்ளை வான் இராணுவ கடத்தல் அதிகம் இடம் பெற்றுள்ளது.
ஒட்டு மொத்தமாக சர்வதேச நீதி விசாரணை மூலமாக நீதியை இப் புதை குழி விவகாரம் தொடர்பில் எமக்கு பெற்றுத் தர வேண்டும்.
அரசாங்கம் மனித புதை குழி உள்ள இடங்களை ஆய்வு செய்து வெளிநாட்டு ஊடகம் மற்றும் பொறி முறை ஊடாக தீர்வுகளை தர வேண்டும் என மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம் என மேலும் தெரிவித்தார்.