தமிழர்கள் அரசாங்கத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். திருகோணமலை சம்பவத்தை அரசாங்கம் முறையாக கையாள வேண்டும் இதற்கு ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைத்து தமிழர்கள் அரசாங்கத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை பாதுகாத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்பு இலங்கையில் இனவாதம், மதவாதம் என்பன இல்லாமல் அனைவரையும் சமனாக மதிக்கின்ற அதே நேரம் அனைவருக்கும் சட்டமும் நீதியும் பொதுவானது என்ற வகையில் கடந்த கால அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அமைந்திருந்தது.
ஆனால் திடீரென திருகோணமலையில் ஒரு இரவில் புத்தர் சிலைவைப்பு அதற்கு எதிர்ப்பு காவல்துறை தடியடி சிலை அகற்றல் மீண்டும் காலையில் அதே காவல்துறை பாதுகாப்புடன் சிலையை பிரதிஸ்டை செய்தல் என ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்த விடயத்தில் அரசாங்கம் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை இன்று பலரும் முன்வைக்கின்றார்கள்.இது தொடர்பாக நாடாளுமன்றத்திலும் பேசப்பட்டது.
தற்பொழுது இது ஒரு சர்வதேச விடயமாக மாறியுள்ளது.எனவே அரசாங்கம் இதற்கான முறையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.அதனை விடுத்து இனவாதிகளுக்கு செவி சாய்த்து நீங்களும் கடந்த காலத்தில் இருந்த அரசாங்கத்தைப் போல ஒரு இனவாத அரசாங்கமாக மாறிவிட வேண்டாம்.
தவறு எங்கு நடந்தாலும் அதனை ஏற்றுக் கொண்டு அதனை திருத்துவதற்கும் சட்டத்தை மீறுகின்றவர்களுக்கும் உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவிக்க வேண்டும்.
எனவே இந்த விடயத்தை அரசாங்கம் சரியாக கையாளாவிட்டால் சர்வதேச ரீதியாக பல பாதிப்புகள் ஏற்படலாம்.இதன் மூலம் தற்பொழுது மிகவும் வேகமாக வளர்ந்து வருகின்ற உல்லாசத்துறைக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம். எமது அந்நிய செலவாணி குறைவடையலாம்.
மேலும் அரசாங்கத்தின் மீது வடகிழக்கு மக்கள் பாரிய நம்பிக்கையுடன் வாக்களித்திருக்கின்றார்கள்.அவர்களுடைய நீண்ட நாள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றார்கள்.
இந்த விடயங்களை கருத்தில் கொண்டு இது தொடர்பாக அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
