News

வங்கதேசம் முழுதும் நீடிக்கும் பதற்றம் ஹிந்து இளைஞர் கொலையில் 7 பேர் கைது

 

 

வங்கதேசத்தில் சமீபத்தில் ஏற்பட்ட கலவரத்தை பயன்படுத்தி திபு சந்திர தாஸ், 27, என்ற ஹிந்து இளைஞரை ஒரு கும்பல் கடுமையாக தாக்கி சாலையில் தீயிட்டு எரித்து கொடூரமாக கொன்றது. இந்த சம்பவத்தில், இந்தியாவின் அழுத்தத்தைத் தொடர்ந்து, ஏழு பேரை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர்.

நம் அண்டை நாடான வங்கதேசத்தில், கடந்த ஆண்டு இடஒதுக்கீடுக்கு எதிராக மாணவர் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தில் பங்கெடுத்த ஷெரீப் ஓஸ்மான் ஹாதி அதன் பின் முக்கிய மாணவர் தலைவராக அறியப்பட்டார்.

இவர் இன்குலாப் மஞ்ச் என்ற மாணவர் – இளைஞர் அமைப்பின் செய்தித் தொடர்பாளராக இருந்தார். இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை பரப்புவது, வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது தடை செய்யப்பட்ட அவாமி லீக் கட்சி போன்றவற்றுக்கு எதிராக தீவிர பிரசாரம் செய்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 12ம் தேதி ஷெரீப் ஓஸ்மான் சுடப்பட்டார். இதில் தலையில் காயமடைந்த அவர், சிகிச்சை பலனின்றி 18ம் தேதி இறந்தார். இந்த செய்தி பரவியதும், வங்கதேச தலைநகர் டாக்கா உட்பட பல நகரங்களில் நேற்று முன்தினம் கலவரம் மூண்டது.

கடைகள், வணிக வளாகங்கள், பத்திரிகை அலுவலகங்கள், அவாமி லீக் கட்சி அலுவலகங்கள், முன்னாள் அமைச்சரின் இல்லங்கள் தாக்கப்பட்டன.

இந்த கலவரத்தை பயன்படுத்தி மைமென்சிங் நகரில் ஜவுளி துறையில் பணியாற்றி வந்த திபு சந்திர தாஸ் என்ற ஹிந்து தொழிலாளியை ஒரு கும்பல் மத உணர்வுகளை புண்படுத்தி விட்டதாக கூறி கடுமையாக தாக்கியது.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் உடலை வன்முறை கும்பலைச் சேர்ந்தவர்கள் மரத்தில் கட்டி தொங்கவிட்டு தீ வைத்து எரித்தனர். அப்போதும் ஆத்திரம் அடங்காமல் டாக்கா – மைமென்சிங் தேசிய நெடுஞ்சாலைக்கு சந்திர தாஸ் உடலை துாக்கி வந்து போட்டு மீண்டும் தீ வைத்தனர்.

இதை அங்கு கூடியிருந்த ஏராளமானோர் மொபைலில் படம் பிடித்தனர். ஒருவரும் இந்த செயலைக் கண்டிக்கவோ தடுக்கவோ முன் வரவில்லை. அடிக்கடி ஹிந்து சிறுபான்மையினர் மீது வங்கதேசத்தில் இது போன்ற வன்முறை திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்படுகிறது.

திபு சந்திர தாஸ் கொலையில் உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி துாதரகம் வாயிலாக மத்திய அரசு வங்கதேசத்துக்கு அழுத்தம் தந்தது. அந்நாட்டின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், திபு சந்திர தாஸ் கொலையில் தொடர்புடையவர்கள் என ஏழு பேரை வங்கதேச போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது. மேலும் கைது எண்ணிக்கை உயரக்கூடும் என போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையே, ஓஸ்மான் ஹாதியின் உடல் நேற்று டாக்காவில் அடக்கம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இறுதிச் சடங்கில், முகமது யூனுஸ் உட்பட அரசு தரப்பிலும் பலர் கலந்து கொண்டனர். நாடு முழுதும் பதற்றமான சூழ்நிலை தொடர்கிறது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top