சீனாவின் ஹைனன் தீவை உலகின் மிகப்பெரிய தடையற்ற வர்த்தக துறைமுகமாக மாற்றும் வரலாற்று சிறப்புமிக்க திட்டத்தை சீனா அதிகாரப்பூர்வ மாக துவக்கியுள்ளது.
நம் அண்டை நாடான சீனாவின், தென்சீன கடல்பகுதியில் அமைந்துள்ளது ஹைனன் தீவு.
சீனாவின் பிரதான நிலப்பரப்பான குவாங்டாங் மாகாணத்தில் இருந்து, கியுசோவ் நீரிணை வாயிலாக இது பிரிக்கப்பட்டுள்ளது.
இது வியட்நாமுக்கு கிழக்கிலும், பிலிப்பைன்சுக்கு மேற்கிலும் அமைந்துள்ளது. மொத்தம், 35,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இத்தீவு, தைவான் பரப்பளவுக்கு இணையானது; சிங்கப்பூரைவிட 50 மடங்கு பெரியது.
இத்தீவை உலகின் மிகப் பெரிய சுதந்திர வர்த்தக துறைமுகமாக மாற்றுவதற்கான திட்டத்தை சீனா அதிகாரப்பூர்வமாக துவக்கியுள்ளது.
இதன்படி, முழுத் தீவும் இப்போது ஒரு தனி சுங்க மண்டலமாக பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது, சீனாவின் பிற பகுதிகளில் இருக்கும் சட்ட திட்டங்களுக்கும், இங்குள்ள சட்ட திட்டங்களுக்கும் வித்தியாசம் இருக்கும்.
இதன்படி, வெளிநாடுகளில் இருந்து ஹைனன் தீவுக்குள் வரும் இயந்திரங்கள் மற்றும் மூலப்பொருட்கள் உட்பட, 74 சதவீத பொருட்களுக்கு எவ்வித இறக்குமதி வரியும் கிடையாது. இதற்கு முன், 21 சதவீதம் வரி வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த வரி விலக்கு காரணமாக,’ஐபோன்’ மொபைல் போன் விலை மற்ற இடங்களைக் காட்டிலும் இங்கு 8,300 ரூபாய் வரை குறைவாக கிடைக்க வாய்ப்புள்ளது.
முதலீடு மேலும், வெளி நாடுகளில் இருந்து ஒரு பொருளை ஹைனனுக்கு இறக்குமதி செய்து, அங்குள்ள தொழிற்சாலைகளில் அதற்கு, 30 சதவீதம் மதிப்பு கூட்டுதல் செய்தால், அப்பொருளை சீனாவுக்கு கொண்டு செல்லும்போது சுங்கவரி எதுவும் விதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக, நிறுவனங்கள் ஏற்றுமதி – இறக்குமதிக்கு மட்டும் இத்தீவை மையமாக பயன்படுத்தாமல், அங்கு தொழிற்சாலைகளை நிறுவவும் சீனா ஊக்குவிக்கிறது-.
இங்கு ஆரம்பிக்கப்படும் நிறுவனங்களுக்கான வரி விதிப்பு, 15 சதவீதம் மட்டுமே என சீனா தெரிவித்துள்ளது. சீனாவின் பிற பகுதிகளில் இவ்வரி, 25 சதவீதமாகும்.
இதேபோன்று, இங்குள்ள நிறுவனங்களில் பணிபுரியும் திறமையான பணியாளர்களுக்கான வருமான வரி விதிப்பும், 15 சதவீதம் மட்டுமே என தெரிவித்துள்ளது.
இது பிற பகுதிகளில், 45 சதவீதமாக உள்ளது. இத்தீவில் புதிய சுங்க வரி திட்டம் துவங்கிய முதல் நாளிலேயே, ஐரோப்பிய நாடான ஜெர்மனியின், ‘சீமென்ஸ் எனர்ஜி’ நிறுவனம் ஹைனனில் தன் கிளை நிறுவனத்தை துவக்கியுள்ளது.
ஹைனன் கடந்த ஐந்து ஆண்டுகளில், 1.31 லட்சம் கோடி ரூபாய்க்கான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்துள்ளது. 176 நாடுகளைச் சேர்ந்த 8,000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஏற்கனவே இங்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவில் 22 தடையற்ற வர்த்தக மண்டலங்கள் இருந்தாலும், ஹைனன் தனித்துவமாக இருக்கப் போகிறது.
இதுவரை கடற்கரை மற்றும் ஓய்வு விடுதிகளுக்கு மட்டுமே உலகளவில் பெயர் பெற்றிருந்த ஹைனன், சீனச் சந்தைக்கான மிக முக்கியமான நுழைவாயில்களில் ஒன்றாக மாறும்.
அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் சீனப் பொருட்கள் மீது வர்த்தக தடைகளை விதித்து வரும் நிலையில், உலக முதலீட்டாளர்களை ஈர்க்க சீனா எடுத்துள்ள மிகப்பெரிய ஆயுதமாக இத்திட்டம் பார்க்கப்படுகிறது.
தடையற்ற வர்த்தக மண்டலம் என்பது, ஒரு நாட்டின் எல்லைக்குள் இருந்தாலும், வர்த்தகம் மற்றும் வணிகத்தை பொறுத்தவரை, அந்நாட்டின் பொதுவான சட்டங்களில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட பகுதியாகும். வெளிநாடுகளில் இருந்து, இக்குறிப்பிட்ட வர்த்தக மண்டலத்துக்குள் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி கிடையாது. ஒருவேளை அப்பொருட்கள் இம்மண்டலத்தை தாண்டி அந்நாட்டின் பிற பகுதிகளுக்குள் கொண்டு சென்றால் மட்டுமே வரி செலுத்த வேண்டும். வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவும், வேலைவாய்ப்பு மற்றும் ஏற்றுமதிகளை அதிகரிப்பதை நோக்கமாக கொண்டும் இம்மண்டலங்கள் உருவாக்கப்படுகின்றன. இம்மண்டலங்களுக்குள், வெளிநாட்டு பொருட்களை வரியின்றி சேமித்து வைக்கலாம். ஒரு நாட்டில் இருந்து பொருட்களை வாங்கி, இங்கு கொண்டு வந்து, பின் வரியின்றி மற்றொரு நாட்டுக்கு அனுப்பலாம். மேலும், கச்சாப் பொருட்களை இறக்குமதி செய்து, இங்குள்ள தொழிற்சாலைகளில் அவற்றை இறுதிப் பொருட்களாக மாற்றி ஏற்றுமதி செய்யலாம்.
