News

உக்ரேனின் எரிசக்தி உட்கட்டமைப்பு மீது ரஷ்யா பெரியளவிலான ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்கள்

உக்ரேனின் எரிசக்தி உட்கட்டமைப்புகளைச் சீர்குலைக்கும் நோக்கில், ரஷ்யா  டஜன் கணக்கான டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளைக் கொண்டு பாரிய தாக்குதலை நடத்தியுள்ளதாக அந்நாட்டு  இராணுவம் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

தலைநகர் கிவ், கருங்கடல் துறைமுக நகரான ஒடெசா மற்றும் உக்ரேனின் மத்தியப் பகுதிகள் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளன.

ரஷ்யா ஒரே நேரத்தில் ஏராளமான தாக்குதல் ட்ரோன்கள், பொலிஸ்டிக் மற்றும் குரூஸ் ஏவுகணைகளைப் பயன்படுத்தியுள்ளது.

கிவ் பிராந்தியத்தில் ஐந்து மாவட்டங்களில் உள்ள 10-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. இதில் குறைந்தது ஒருவர் காயமடைந்துள்ளதாக ஆளுநர் மைகோலா கலாஷ்னிக் தெரிவித்தார்.

பிராந்தியத்தின் எரிசக்தி உட்கட்டமைப்பில் இரவு நேரத்தில் ட்ரோன் தாக்குதல் இடம்பெற்றதாக ஒடேசா ஆளுநர் ஓலே கிப்பர் டெலிகிராமில் பதிவிட்டுள்ளார்.

“இரவு நேரத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலால் பிராந்தியத்தின் எரிசக்தி உள்கட்டமைப்புகளில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தற்போது அந்தத் தீ அணைக்கப்பட்டுள்ளது என ஒடெசா ஆளுநர் ஓலே கிப்பர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் உக்ரேனின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் மின் விநியோக மையங்களைக் குறிவைத்துத் தாக்கி வருகிறது.

உக்ரேனின் மின்சாரம் மற்றும் எரிவாயு விநியோகத்தைத் தடுத்து, அந்நாட்டின் பாதுகாப்புத் திறனை முடக்குவதே ரஷ்யாவின் நோக்கம் என அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top