News

நோர்வேயில் அமெரிக்க தூதரகத்தில் குண்டுவெடிப்பு

 

 

நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தின் நுழைவாயிலில் இன்று ஞாயிற்றுக்கிழமை (08) அதிகாலை சக்திவாய்ந்த குண்டு வெடிப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் தூதரகக் கட்டடத்திற்குச் சிறு சேதங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என நோர்வே பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மத்திய கிழக்கில் அமெரிக்கா முன்னெடுத்து வரும் இராணுவ நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக பல்வேறு நாடுகளில் உள்ள அமெரிக்கத் தூதரகங்களுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

அந்நாட்டு நேரப்படி இன்றையதினம் அதிகாலை 1.00 மணியளவில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தூதரகத்தின் கொன்சியூலர் பிரிவு நுழைவாயிலையே இந்த வெடிப்புத் தாக்குதல் இலக்கு வைத்துள்ளது.

கட்டடத்தின் ஒரு பகுதிக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது. எனினும், உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என பொலிஸ் கட்டளை அதிகாரி மைக்கேல் டெல்மர் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தைத் தொடர்ந்து ஸ்லோ பொலிஸார், மோப்ப நாய்கள், ட்ரோன்கள் மற்றும் ஹெலிகொப்டர்களின் உதவியுடன் பாரிய தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளனர். தானியங்கி ஆயுதங்கள் ஏந்திய பொலிஸார் தூதரகத்தைச் சூழப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஈரான் மீதான அமெரிக்காவின் இராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு மற்றும் ஏனைய பிராந்தியங்களில் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் ஏற்கனவே அதியுயர் பாதுகாப்பு எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளன.

எனினும், ஒஸ்லோவில் இடம்பெற்ற இந்த வெடிப்புச் சம்பவத்திற்கும் மத்திய கிழக்கு போருக்கும் நேரடித் தொடர்பு உள்ளதா என்பது குறித்து இதுவரை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என நோர்வே பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வே புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top