News

ஈரானின் அடுத்த வியூகம் பாப் எல்-மண்டேப் நீரிணை

ஹோர்முஸ் நீரிணை வழியாக ஏற்கனவே கப்பல் போக்குவரத்தை முடக்கியுள்ள ஈரான், தற்போது தனது அடுத்த ஆபத்தான வியூகத்தை கையில் எடுத்துள்ளது.

ஏமனில் உள்ள தனது ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்களைப் பயன்படுத்தி, செங்கடலின் நுழைவாயிலான ‘பாப் எல்-மண்டேப்’ நீரிணையை மூடப்போவதாக ஈரான் மறைமுகமாக எச்சரித்துள்ளது.

வொஷிங்டனுக்கு எதிராக ஒரு புதிய போர்க்களத்தைத் திறப்பதன் மூலம், உலகின் மிக முக்கியமான இரண்டு எரிசக்தி வழித்தடங்களையும் ஒரே நேரத்தில் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்க ஈரான் முயன்று வருகிறது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஹூதி அமைப்பின் அரசியல் பிரிவு உறுப்பினர் முகமது அல்-ஃபராஹ் விடுத்துள்ள எச்சரிக்கையில், “நிலைமை மேலும் மோசமடைந்தால், பாப் எல்-மண்டேப் நீரிணையும் ஹோர்முஸ் நீரிணையும் கூட்டு கூட்டணியின் மூலம் மூடப்படும்.

இதனால் மசகு எண்ணெய் விலை பெரலுக்கு 200 டொலராக உயர்ந்து உலகப் பொருளாதாரத்திற்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும்” என்று கூறியுள்ளார்.

சவுதி அரேபியாவின் மசகு எண்ணெய் ஏற்றுமதி மற்றும் உலகளாவிய கப்பல் போக்குவரத்தில் பெரும்பகுதி இந்த பாப் எல்-மண்டேப் வழியாகவே நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரானின் இந்த நகர்வு, போரை இரு நாடுகளுக்கு இடையேயான மோதலாக மட்டும் வைக்காமல் உலகளாவிய பொருளாதார நெருக்கடியாக மாற்றும் ஒரு தந்திரம் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அமெரிக்கா தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தினால், ஈரான் தனது இறுதி ஆயுதமாக இதைப் பயன்படுத்தக்கூடும் என்று எச்சரிக்கப்படுகிறது.

அதே நேரத்தில், ஹூதிகள் இந்த எல்லையைத் தாண்டினால், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் அவர்கள் மீது இன்னும் கடுமையான கூட்டு இராணுவத் தாக்குதலை நடத்தக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top