சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு நேர்கோட்டில் வரும்போது, சூரியனின் ஒளி முழுமையாக மறைக்கப்படும். இதனால் பகல் நேரத்திலேயே வானம் இருண்டு, மாலை நேரம் போன்ற சூழல் உருவாகும். முழு சூரிய கிரகணத்தின் போது, சூரியனின் வெளிப்புற வளிமண்டலமான ‘கரோனா’ மட்டும் பிரகாசமான வெண்வட்டம் போல் காட்சியளிக்கும். இந்த அரிய காட்சியே முழு சூரிய கிரகணத்தின் சிறப்பம்சமாகும்.

விண்ணில் நிகழும் வியப்பூட்டும் வானியல் நிகழ்வுகளில் ஒன்றான முழு சூரிய கிரகணம், நேற்று நிகழ்ந்தது. . இந்த அரிய நிகழ்வை உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கண்டு ரசித்தனர். ரஷ்யாவில் உள்ளூர் நேரப்படி மாலை 5 மணிக்கு சந்திரன் முதன்முதலில் சூரியனை மறைத்தது. அப்போது அதன் வெளிப்புற ஒளிவட்டத்தின் மினுமினுப்பான ஒளி மட்டுமே எஞ்சியிருந்தது.
அதன்பின் ஐஸ்லாந்தின் தலைநகரான ரெய்க்ஜாவிக் நகரில் நிகழ்ந்த முழு சூரிய கிரகணத்தை வானியல் ஆர்வலர்கள், சுற்றுலாப் பயணிகள் உட்பட 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்டு களித்தனர்.

ஐரோப்பிய நாடுகளில் சூரியன் மறையும் நேரத்தில் கிரகணம் நிகழ்ந்ததால் கிரகணத்துடன் கூடிய சூரிய அஸ்தமனத்தை காணும் அரிய வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக ஸ்பெயினில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்ந்த முழு சூரிய கிரகணத்தைக் கண்டு மக்கள் ஆர்ப்பரித்தனர்.
