News

பௌத்தமயமாகும் தமிழர் தாயகம் – ஐ.நா சிறப்பு தூதுவரை நியமிக்க வலியுறுத்து

தமிழர் தேசமான ஈழத்திற்கு சுயாட்சி இன்னமும் கிடைக்கப்பெறாத பகுதியாக அங்கீகரிக்குமாறும் இலங்கைக்கு ஐ.நா.வின் சிறப்புத் தூதுவர் ஒருவரை நியமிக்குமாறும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றிய போதே அங்கத்துவ நாடுகளிடம் அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“இலங்கையில் ஆயுத மோதல் முடிவுக்கு வந்து 13 ஆண்டுகளாகியிருக்கும் இந்நிலையில், இலங்கையின் தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் பெளத்தமயமக்கல் பெரும் வேகமெடுத்துள்ளது.

இலங்கையின் நீதிமன்றக் கட்டளையை மீறி தமிழரின் தொன்மையான வழிபாட்டிடமான குருந்தூர்மலை அழிக்கப்பட்டு, அங்கு ஒரு பெளத்த விகாரை கட்டப்பட்டிருக்கிறது

. இப்படியாக தமிழர் தாயகமெங்கிலும் குறிப்பாக சிங்களவர்கள், பெளத்தர்கள் இயல்பாக குடியிருக்காத பகுதிகளில் கூட பெளத்த மத ஆலயங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

நாயாறு, தையிட்டி, நாவற்குழி, மாங்குளம் சந்தி, கச்சல் சமளங்குளம், கன்னியா வெந்நீரூற்று என்பன இவ்வாறு தமிழர் தாயக நிலத்தில் பெளத்த ஆலயங்கள் அமைக்கப்பட்டு வரும் சில இடங்களாகும்.

இவற்றுள் பெரும்பாலானவை இலங்கை அரச ஆதரவோடு தமது அரசின் நீதிமன்றக் கட்டளைகளை தாமே மதிக்காது உதாசீனப்படுத்தி கட்டமைக்கப்பட்டு வரும் ஆலயங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்தோடு, சில இடங்களில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட பெளத்த ஆலயங்களை சூழ இருக்கும் பகுதிகளில் தமிழர் தாயகத்தின் இனப்பரம்பலை திட்டமிட்டு மாற்றியமைக்கும் முனைப்போடு அரச ஆதரவுடன் சிங்களக் குடியேற்றத் திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்தமடு மற்றும் மாதவனை மேய்ச்சல் நிலங்களில் தமிழர்கள் காலங்காலமாக 3,00,000 க்கும் மேற்பட்ட கால்நடைகளுடன் மேய்ச்சலுக்குப் பயன்படுத்தி வரும் நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறி அங்கு சட்டவிரோதமான முறையில் அரச ஆதரவோடு சோளப்பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வரும் சிங்களவர்களால் தமிழர்கள் மேய்ச்சல் நிலங்களிலிருந்து துரத்தப்படுகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top