தடுப்பூசிக்கான தீவிர நடவடிக்கைகளுக்கு மத்தியில் சடலங்கள் குவிந்து வருவதால், எபோலா பரவல் தற்போது கட்டுப்பாட்டை மீறிவிட்டதாக நிபுணர்கள் தரப்பு எச்சரித்துள்ளனர்.
காங்கோ ஜனநாயகக் குடியரசில், எபோலா பரவல் காரணமாக சுமார் 220 பேர் மரணமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

தற்போது மீட்புக் குழுக்களால் சமாளிக்கக்கூடிய அளவை விட நோய்த்தொற்றுகளின் விகிதம் அதிகமாக உள்ளது என்று உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சியூட்டும் வகையில் ஒப்புக்கொண்டுள்ளது.
இதனிடையே, எங்களது செயல்பாடுகளை நாங்கள் அவசரமாக விரிவுபடுத்தி வருகிறோம்; ஆனால் தற்போதைய நிலையில், இந்தத் தொற்றுநோய் எங்களை முந்திக்கொண்டு செல்கிறது என டைரக்டர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியுள்ளார்.
மட்டுமின்றி, நோய் பரவலைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்குமாறு, காங்கோ ஜனநாயகக் குடியரசின் அண்டை நாடுகளை கெப்ரேயேசஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, முன்னாள் FDA ஆணையர் டாக்டர் ஸ்காட் காட்லீப் செய்தி ஊடகம் ஒன்றிடம் தெரிவிக்கையில், மேற்கு ஆப்பிரிக்காவில் இந்த நோய் பரவல் கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருக்கிறது என்றார்.
இதை அவர்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சிப்பதற்கு நீண்ட காலம் ஆகும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தற்போது எபோலாவைக் கட்டுப்படுத்தாவிட்டால், அது உலகின் பிற பகுதிகளிலும் பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

அப்படி என்றால் அது ஒரு பொது சுகாதாரப் பேரழிவாக மாறிவிடும், ஏனென்றால் அப்போது இதைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாகிவிடும் என்றார்.
தற்போதைய கொள்ளைநோய், விலங்குகளிலிருந்து மனிதர்களுக்குப் பரவும் வைரஸ் சார்ந்த இரத்தப்போக்குக் காய்ச்சலின் மூன்றாவது மிகப்பெரிய பரவலாகும்.
இது வியர்வை, இரத்தம், மலம் அல்லது வாந்தி மூலம் பரவுகிறது. கோவிட் தடுப்பூசியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டவர்கள், எபோலா தடுப்பூசியைத் தயாரிக்கத் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்; இதற்கான பரிசோதனைகள் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பெருந்தொற்று அறிவியல் நிறுவனத்தில் தடுப்பூசி நோயெதிர்ப்பியல் பிரிவின் தலைவரான தெரசா லாம்ப் தெரிவிக்கையில், தற்போதைய இந்த நெருக்கடியான சூழல் தொடர்பில் நாங்கள் எச்சரிக்கையுடனும் நம்பிக்கையுடனும் இருக்கிறோம் என்றார்.
தடுப்பூசியை உற்பத்தி செய்வதற்குத் தேவையான மூலப்பொருட்களை, தங்களது கூட்டாளியான சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவுக்கு கூடிய விரைவில் கொண்டு சேர்ப்பதற்கான பணிகளில் ஆக்ஸ்போர்டு குழுவினர் ஈடுபட்டுள்ளனர் என்று லாம்ப் கூறினார்.
இதனிடையே, 220 இறப்புகளுக்கு மேலாக, அப்பகுதியில் 904 பேர்கள் எபோலா நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக காங்கோ தகவல் தொடர்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
0z5sntrhகடந்த வாரம் உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட தகவலின்படி, காங்கோவில் இந்தக் கொடிய வைரஸ் பரவுவது இது 17வது முறையாகும். எபோலாவின் ஆரம்ப அறிகுறிகள் திடீரெனத் தோன்றி, காய்ச்சல், தலைவலி மற்றும் சோர்வு போன்ற சளி காய்ச்சலைப் போலவே இருக்கும்.
நோய் முற்றிய நிலையில், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படுவதுடன், உடலின் உறுப்புகளும் சரியாகச் செயல்படுவதில்லை. பின்னர், நோயாளிகளுக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரகச் செயலிழப்பு மற்றும் உள் இரத்தப்போக்கு ஏற்படலாம்.
