News

கயானாவில் 116 பேருடன் சென்ற பயணிகள் படகு கவிழ்ந்து விபத்து

தென் அமெரிக்க நாடான கயானாவின் கடற்கரைப் பகுதியில் 116 பயணிகள் மற்றும் மாலுமிகளுடன் சென்ற எம்.வி. பரிமா என்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 50க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

கயானாவின் தலைநகரான ஜார்ஜ்டவுனிலிருந்து போர்ட் கைடுமா நோக்கிச் சென்று கொண்டிருந்த இந்த படகு, சனிக்கிழமை இரவு 11 மணியளவில் திடீரென விபத்தில் சிக்கி உதவி கோரியதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கயானா பிரதமர் மார்க் பிலிப்ஸ் கூறுகையில், இதுவரை 53 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், பகல் நேரத்தில் தேடுதல் பணிகள் தொடர்வதால் மேலும் பலர் மீட்கப்படுவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த மீட்புப் பணியில் கயானாவின் கடலோர காவல்படை மற்றும் தனியார் கப்பல்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் ஜுஆன் எட்கில் குறிப்பிட்டுள்ளார்.

விபத்துக்குள்ளான படகில் சுமார் 250 லைஃப் ஜாக்கெட்டுகள், எட்டு உயிர்காப்பு படகுகள் மற்றும் பிற பாதுகாப்பு உபகரணங்கள் இருந்ததாகக் கூறிய அவர், மீட்கப்படுபவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

எனினும், இந்த படகு விபத்து எதனால் ஏற்பட்டது என்பதற்கான துல்லியமான காரணங்கள் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top