குஜராத் மாநிலத்தில் சண்டிபுரா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இதுவரை 22 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பிரபுல் பனஷேரியா தெரிவித்துள்ளார்.
ஜூலை முதல் வாரத்தில் இருந்து இந்த வைரஸ் குஜராத்தில் பரவி வருகிறது.
தரவுகளின்படி, குஜராத்தில் இதுவரை 184 பேருக்குச் சண்டிபுரா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. அதில் 35 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று உறுதியானவர்களில் 7 பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 6 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆகஸ்ட் 3 நிலவரப்படி மேலும் 11 பேரின் மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளன.
பாதிக்கப்பட்ட அனைவரும் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆவர். இந்தத் தொற்று குறிப்பிட்ட ஒரு கிராமத்திற்கோ அல்லது பகுதிக்கு மட்டும் வரையறுக்கப்படவில்லை; மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவியுள்ளது.
