வியன்னா : ஆஸ்திரியாவில் பள்ளி வகுப்பறைக்குள் நுழைந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் 10 பேரை சுட்டுக்கொன்ற மாணவர் ஒருவர், கழிப்பறைக்குள் சென்று சுட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார்.
ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவின் கிரேஸ் நகரில் போர்க் மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது.
இங்கு நேற்று உள்ளூர் நேரப்படி, காலை 10:00 மணியளவில் தொடர் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு கோப்ரா எனப்படும் சிறப்பு போலீசார் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் பள்ளியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் எடுத்தனர்
பள்ளியில் சிக்கியிருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றினர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த, 30க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், ‘பள்ளிக்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தியவர் பள்ளியின் மாணவர்களில் ஒருவர் என தெரிய வந்துள்ளது.
‘இரண்டு வகுப்பறைகளுக்குள் சென்று சுட்டுள்ளார். இதில் ஒன்பது மாணவர்கள், ஒரு ஆசிரியர் என 10 பேர் உயிரிழந்தனர்.
‘அதன்பின் கழிப்பறைக்குள் சென்று தாக்குதல் நடத்திய மாணவரும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறோம்’ என, கூறினர்.