சீனாவின் மீண்டும் COVID-19 தொற்றுநோய் அதிகரித்து வருவதாக சமூக ஊடகங்களில் பரவும் தகவல்கள் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.
“Gong Gene World” தளத்தில் உள்ள “Third Eye” என்ற சேனல், மே 17ஆம் திகதி புதிய வகை தொற்றுநோய் ஒன்று சீனாவில் பரவி வருகிறது என எச்சரித்துள்ளது. ஏற்கனவே, ஏப்ரல் மாதத்திலிருந்து, அவசர சிகிச்சைப் பிரிவுகளில் COVID-19 மீண்டும் உயர்ந்துள்ளதாக சீன CDC உறுதிப்படுத்தியுள்ளது.
இருப்பினும், வைத்தியசாலைகள் பல கொரோனாவுக்கு சோதனை செய்ய மறுத்துவரும் சூழ்நிலையில், தொற்றின் உண்மையான அளவுகள் வெளிச்சத்திற்கு வராமல் தடுக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஹார்பின் நகரத்தில் உள்ள ஷின்டாய் வைத்தியசாலை வைத்தியர் ஒருவர், “நோயாளிகள் பெரும்பாலும் காய்ச்சல், இருமல், தொண்டை வலி ஆகிய அறிகுறிகளுடன் வருகின்றனர். அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று Douyin (சீனாவின் TikTok) மூலம் கூறியுள்ளார்.
மேலும், விடுமுறைக்குப் பிறகு தொற்றுகள் அதிகரித்துள்ளதாகவும், “ஒருவர் நோய்வாய்ப்பட்டால் முழு குடும்பமே பாதிக்கப்படுகிறது” எனவும் Douyin பயனர்கள் எச்சரிக்கின்றனர்.
சமூக ஊடகங்களின் அடிப்படையில் உருவாகும் இந்த தகவல்கள், சீனாவில் புதிய கொரோனா அலையா? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளன.