இஸ்ரேல் (Israel) மீதான தனது இராணுவ நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வதாகவும், தற்போது எந்தவொரு போர் நிறுத்த ஒப்பந்தம் இல்லை எனவும் ஈரான் (Iran) அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) இரு நாடுகளுக்கும் இடையே “முழுமையான போர் நிறுத்தம்” ஏற்பட்டதாக அறிவித்த சில மணி நேரங்களில் வெளியாகியுள்ளது.
ஈரான் வெளியுறவு அமைச்சர் செயத் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi ), X தளத்தில் வெளியிட்ட பதிவில், “தற்போது எந்தவொரு போர் நிறுத்த ஒப்பந்தமோ அல்லது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்த ஒப்பந்தமோ இல்லை.
இருப்பினும், இஸ்ரேல் அரசு ஈரான் மக்கள் மீதான தனது சட்டவிரோத ஆக்கிரமிப்பை தெஹ்ரான் நேரப்படி காலை 4 மணிக்கு முன் நிறுத்தினால், அதற்கு பிறகு எங்கள் பதிலடி நடவடிக்கைகளை தொடர விருப்பமில்லை,” என்று குறிப்பிட்டார்.
மேலும், இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்த இறுதி முடிவு பின்னர் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பு, ஈரான் கட்டாரில் உள்ள அல் உதெய்த் அமெரிக்க இராணுவ தளத்தை குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திய சில மணி நேரங்களில் வெளியானது.
இந்த தாக்குதல், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் ஈரானிய இலக்குகள் மீதான முந்தைய தாக்குதல்களுக்கு பதிலடியாக நடத்தப்பட்டதாக ஈரான் கூறியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி, தனது ட்ரூத் சோஷியல் தளத்தில், இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே 12 மணி நேர முதல் கட்ட போர் நிறுத்தம் 6 மணி நேரத்தில் தொடங்கும் என்றும், 24 மணி நேரத்திற்குள் “12 நாள் போர்” முடிவடையும் என்றும் அறிவித்திருந்தார்.
இருப்பினும், இஸ்ரேல் அல்லது ஈரான் அரசாங்கங்களிடமிருந்து இந்த ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.