இலங்கை, உள்ளிட்ட பல உலகநாடுகள் பலவற்றில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கும், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்குமென அமெரிக்காவினால் வழங்கப்பட்டுவரும் நிதியளிப்பை நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு சர்வதேச செயற்திட்டங்களுக்கு அமெரிக்காவினால் வழங்கப்பட்டுவரும் குறித்த நிதியளிப்பை நிறுத்த வெள்ளை மாளிகை பரிந்துரைத்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளிளிட்டுள்ளன.
இதன்படி உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் பொறுப்புக்கூறல் செயற்திட்டங்களுக்கான நிதியளிப்பை நிறுத்துமாறு அமெரிக்க நிர்வாக மற்றும் பாதீட்டு அலுவலகம் பரிந்துரைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயத்துடன் தொடர்புடைய நம்பத்தகுந்த 3 தகவல் மூலங்கள் ஊடாகவும், அரசாங்கத்தின் உள்ளக அறிக்கைகள் ஊடாகவும் இதனை அறியமுடிவதாக சர்வதேச ஊடக செய்திகளில் கூறப்பட்டுள்ளது.
அத்தோடு இந்தப் பரிந்துரைகள் இவ்விடயத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இறுதித்தீர்மானம் அல்ல எனவும், மாறாக இதுகுறித்து மேன்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்துக்கு உண்டு எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதன்படி அமெரிக்க நிர்வாக மற்றும் பாதீட்டு அலுவலகத்தினால் பொறுப்புக்கூறல் செயற்திட்டத்துக்கான நிதியளிப்பை நிறுத்துமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் ஈராக், நேபாளம், இலங்கை, கொலம்பியா, பெலாரஸ், சூடான், தென்சூடான், ஆப்கானிஸ்தான் மற்றும் கம்பியா ஆகிய நாடுகள் உள்ளடங்குகின்றன.