தன்சானியாவில் நேற்று முன்தினம் இரண்டு பயணிகள் பஸ் வண்டிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 40 பேர் உயிரிழந்துள்ளதோடு 30 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸார் குறிப்பிடுகையில், தன்சானியாவின் கிளிமஞ்சாரோ மோனி டங்கா நெடுஞ்சாலையில் உள்ள சபாசாபா பகுதியிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த இரண்டு பஸ் வண்டிகளும் மோதிய வேகத்தில் தீப்பற்றி எரிந்தது. இதனால் பயணிகள் வெளியில் வர முடியாமல் உயிர்ப் பயத்தில் அலறியுள்ளனர்.
இவ்விபத்து குறித்து அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்துள்ளனர். ஆனாலும் இரண்டு பஸ்களிலும் பயணம் செய்த பெண்கள், சிறுவர்கள் உடல் கருகியே உயிரிழந்துள்ளனர். 30 இற்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இசம்பவத்தில் காயமடைந்த சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது என்றுள்ளனர். திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றவர்கள் பயணித்த பஸ்ஸினது டயரின் காற்று போனதால் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், மற்றொரு பஸ்ஸுடன் நேருக்கு நேர் மோதி இவ்விபத்து ஏற்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.