News

செம்மணியைப் போன்றே மண்டைதீவிலும் மனிதப் புதைகுழிகள்

1990களில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கைகளின் போது மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 80இற்கும் அதிகமான இளைஞர்களும் யுவதிகளும் காணாமலாக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உடலங்கள் மண்டைதீவு பகுதி குறிப்பிட்ட சில கிணறுகளில் இருப்பதாகவும் அதற்கான வாழும் சாட்சியங்கள் இருப்பதாகவும் சபையின் உறுப்பினர் பிரகலாதன் கூறியதுடன் இந்த புதைகுழியை அகழ்ந்து உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

வேலணை பிரதேச சபையின் இரண்டாவது மாதாந்த கூட்டம் நேற்று (20) தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் காலை 10.00 மணிக்கு சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்ற இவ்வாறு வலியுதுத்தியுள்ளார்.

மேலும் செம்மணி புதைகுழி விவகாரம் பூதாகரமாக இருக்கும் இன்றைய சூழலில் வேலணை பிரதேசத்தில் 90 ஆம் ஆண்டு நடைபெற்றதாக கூறப்படும் இந்த புதைகுழியையும் அகழ்வதற்கு அப்பிரதேசத்தை உள்ளடக்கிய பிரதேச சபையாக இருப்பதால் அதை வலுயுறுத்தவே இந்த விவகாரம் இங்கு வலியுறுத்தப்படுகின்றது என்றும் கூறியுள்ளார்.

இது குறித்து சபையில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் குறித்த மனிதப் புதைகுழி விவகாரம் காலத்துக்கு காலம் தேர்தல் அரசியல் பேசும் பொருளாக இருப்பதால் இது தொடர்பிலான உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும்.

குற்றவாளிகள் வெளிக்கொணரப்பட வேண்டும் என்பதுடன் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு தீர்வும் பரிகாரமும் வழங்குவது அவசியம் என்றும் உறுப்பினர்களான அனுசியா ஜெயகாந்த், பார்த்தீபன் மற்றும் கருணாகரன் நாவலன் ஆகியோர் வலியுறுத்தியிருந்தனர்.

இந்நிலையில் குறித்த ஆதாரங்களுடன் துறைசார் தரபுக்கு அறிக்கை அனுப்ப சபையில் தீர்மானிக்கப்பட்டது.

இதேவேளை, சபை அமர்வுகளில் கலந்து கொண்டு பேசிய சபையின் உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த்,

வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் கண்டுகொள்ளப்படாதிருக்கும் வியாபார நடவடிக்கைகளை ஒரு பொறிமுறைக்குள் கொண்டுவந்து அத்தொழில் சார் நடவடிக்கைகளை உறுதிசெய்து கொள்வதற்கான கட்டமைப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

இதன்போது மேலும் கூறிய அவர்,

எமது பிரதேசம் மிக குறைந்த வருமானம்கொண்ட ஒரு சபையாக இருக்கின்றது. இதனால் சபையின் வருவாயை அதிகரிப்பது அவசியமானது.

அதனடிப்படையில் இதுவரைகாலமும் கண்டுகொள்ளப்படாதிருக்கும் கடலட்டை, மீன் வளர்ப்பு பண்ணைகள், பணப்பயிர் உற்பத்தியாளர் மற்றும் பதப்படுத்தி விற்பனை செய்யும் விற்பனையாளர், பால் உற்பத்தி, கால்நடைப் பண்ணைகள், விவசாய உற்பத்திகள், வியாபார நடவடிக்கை நிலையங்கள் உள்ளிட்டவற்றை முறையாக பதிவுக்குட்படுத்தி அவர்களது செயற்பாடுகளை உறுதிப்படுத்துவதுடன் வரி அறவீட்டையும் செய்வது அவசியம்.

எனவே குறித்த நடவடிக்கையை சபை துரித கதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top