அமெரிக்காவைச் சேர்ந்த வர்ஜீனியா ஜியூப்ரே என்ற பெண், மறைந்த இங்கிலாந்து ராணி எலிசபெத் இரண்டாம் அவர்களின் இரண்டாவது மகனும் இளவரசருமான ஆண்ட்ரூ (வயது 65) மீது பாலியல் புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனது இளம் பருவத்தில் பாலியல் தொந்தரவுக்கு ஆளானதாக அவர் குற்றம் சாட்டினார்.
ஆனால் இந்த புகாரை இளவரசர் ஆண்ட்ரூ தொடர்ந்து மறுத்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் வர்ஜீனியா ஜியூப்ரே திடீரென தற்கொலை செய்து கொண்டார். இது இளவரசர் ஆண்ட்ரூவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. அவருக்கு எதிராக கண்டனமும் விமர்சனமும் எழுந்தன.
இதைத்தொடர்ந்து அவர், “அரசுப் பட்டங்களைத் துறக்கிறேன்; என்மீதான குற்றச்சாட்டுகள் மன்னர் மற்றும் அரச குடும்பத்தின் பணிகளுக்கு இடையூறாக உள்ளன. எனவே பொது வாழ்க்கையிலிருந்து விலக முடிவு செய்துள்ளேன்,” என தெரிவித்தார்.
இந்த சூழ்நிலையில் தனது தம்பி இளவரசர் ஆண்ட்ரூவின் அனைத்து அரசுப் பட்டங்கள் மற்றும் சலுகைகளை பறிப்பதற்கான முறைப்படி நடவடிக்கையை மன்னர் சார்லஸ் தொடங்கி உள்ளார். அவருக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளார். மேலும் ஆண்ட்ரூவின் வின்ட்சர் இல்லத்தை காலி செய்யுமாறு பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.
அரண்மனை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “இளவரசர் ஆண்ட்ரூவின் உடை, பட்டங்கள் மற்றும் கவுரவங்களை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இப்போதிலிருந்து அவர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சர் என்று அழைக்கப்படுவார். அவரது வின்ட்சர் இல்லத்தை காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது; அவர் மாற்று தனியார் தங்குமிடத்துக்கு செல்வார்,” என கூறப்பட்டுள்ளது.
மன்னர் சார்லசின் இந்த உத்தரவின் பேரில், இளவரசர் ஆண்ட்ரூ கிழக்கு இங்கிலாந்தில் உள்ள சாண்ட்ரீஸ் ஹாம் எஸ்டேட்டில் உள்ள மாற்று தனியார் தங்குமிடத்துக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரிடமிருந்து யார்க் டியூக் பட்டமும் கவுரவ ராணுவப் பட்டமும் பறிக்கப்பட்டுள்ளன.
பதவிகளை இழந்த ஆண்ட்ரூ, ஒரு காலத்தில் துணிச்சலான கடற்படை அதிகாரியாக பணியாற்றியவர். 1980 ஆம் ஆண்டுக்கு முன்பு அர்ஜென்டினாவுடன் நடந்த பால்க்லாந்து போரின் போது ராணுவத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இளவரசருக்கு எதிராக மன்னர் சார்லஸ் மேற்கொண்டுள்ள நடவடிக்கை இங்கிலாந்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
