கனடாவின் குடிவரவு அமைச்சர் லீனா டியாப், தற்காலிக விசாக்களுடன் கனடாவை விட்டு வெளியேறும் மக்களின் எண்ணிக்கையை கண்காணிக்கும் திறனை தனது துறை பெற வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
குடிவரவு துறை கூறுவதன்படி, இந்த ஆண்டில் வேலை மற்றும் கல்வி அனுமதிகள் உள்ளிட்ட சுமார் 19 லட்சம் தற்காலிக விசாக்கள் காலாவதியாக உள்ளன.
கடந்த ஆண்டு 21 லட்சத்திற்கும் மேற்பட்ட விசாக்கள் காலாவதியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கனடா எல்லை சேவைகள் முகமை (CBSA) மற்றும் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை கனடா (IRCC) சில குறிப்பிட்ட நபர்கள் மற்றும் குழுக்கள் குறித்த தகவல்களை கண்காணிக்க முடிந்தாலும், எத்தனை தற்காலிக குடியாளர்கள் கனடாவை விட்டு வெளியேறுகின்றனர் என்பதை எளிதாக கண்காணிக்கும் அமைப்பு தற்போது இல்லை என்று டியாப் கூறியுள்ளார்.
இந்நிலையில் முன்னதாக CBSA-வின் புலனாய்வு மற்றும் அமலாக்கத்துக்கான துணைத் தலைவர் ஆரன் மெக்ரோரீ, கடந்த ஒக்டோபர் 21 அன்று நடந்த ஒரு குழு கூட்டத்தில், கனடாவை விட்டு வெளியேறும் நபர்களின் விவரங்களை — அவர்கள் பயன்படுத்தும் போக்குவரத்து முறை, பிறந்த திகதி மற்றும் பயண ஆவணங்கள் — கண்காணிக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.
ஆனால், விசா காலாவதியானதால் ஒருவர் வெளியேறுகிறாரா என்பதை தானாக கண்டறியும் திறன் தற்போது இல்லை என்றும், ஒவ்வொரு தரப்பையும் தனித்தனியாக சரிபார்க்க வேண்டியிருப்பதால் அதற்கு அதிக உழைப்புத் தேவைப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
