வடக்கு லெபனானின் திரிப்போலி நகரில் அடுத்தடுத்த இரண்டு கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்ததில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) இரவு இந்த சம்பவம் பதிவானதாகவும், இந்த சம்பவத்தின்போது மீட்கப்பட்ட ஆறு பேர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த கட்டிடம் இரண்டு தொகுதிகளைக் கொண்டிருந்ததுடன், ஒவ்வொன்றிலும் ஆறு அடுக்குமாடி குடியிருப்புகள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கட்டிடம் இடிந்து விழுந்த நேரத்தில் சுமார் 22 பேர் உள்ளே இருந்ததாக குடியிருப்பாளர்கள் மதிப்பிட்டதாக இந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லெபனான் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் அவசரகால மற்றும் நிவாரண நிறுவனங்களின் ஆதரவுடன் சிவில் பாதுகாப்பு குழுக்கள் இணைந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்பற்ற கட்டிடங்கள் காரணமாக “திப்போலியை பேரழிவால் பாதிக்கப்பட்ட நகரமாக அறிவிப்பதாக நகரபிதா அப்தெல் ஹமீத் கரிமே தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதியிலுள்ள மக்கள் அந்த நாட்டு பொலிஸாரால், குறித்த பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவவும், சூழவுள்ள கட்டிடங்களில் வசிப்பவர்களுக்கு தங்குமிடம் வழங்கவும் அனைத்து அவசர சேவைகளை வழங்கவும், மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறும், லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவுன் உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
