News

எரிபொருள் தட்டுப்பாட்டில் சிக்கித் தவிக்கும் கியூபா: ரஷ்யா கடும் எச்சரிக்கை

கியூபாவின் எரிபொருள் தட்டுப்பாடு மிக மோசமான நிலையை எட்டியுள்ளதாக ரஷ்யா எச்சரித்துள்ளது.

இந்தநிலையில், தனது நாட்டின் அரசியல் உறுதியைக் குலைக்க அமெரிக்கா கொடூரமான மற்றும் சுவாசிப்பையே முடக்கும் உத்திகளைக் கையாளுவதாகக் கியூபா குற்றம்சாட்டியுள்ளது.

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் கடத்தப்பட்டதைத் தொடர்ந்து, வெனிசுலாவிலிருந்து கியூபாவிற்கு வரும் எரிபொருள் கப்பல்களை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தடுத்து நிறுத்தினார்.

அத்தோடு, கியூபாவிற்கு எரிபொருள் வழங்கும் மெக்சிகோ போன்ற நாடுகளின் மீது வர்த்தக வரிகளை (Tariffs) விதிப்போம் என அமெரிக்கா எச்சரித்தமை கியூபாவின் பொருளாதாரத்தை முடக்கும் நிலைக்குத் தள்ளியது.

இந்தநிலையில், கியூபாவின் நிலைமை உண்மையிலேயே மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் குறிப்பிட்டுள்ளார்.

இதனுடன், மாஸ்கோ இதற்கான தீர்வுகளைக் காண ஆலோசித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவித்த ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், கியூபா மக்கள் தங்கள் தலைவிதியைத் தாங்களே தீர்மானிக்க வேண்டும் எனத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் தட்டுப்பாட்டினால் நாடு முழுவதும் மின்சாரம் மற்றும் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கியூபா அரசு அவசரகால நடவடிக்கையாக அரசு நிறுவனங்களுக்கு வாரத்தில் நான்கு நாட்கள் வேலை, பல்கலைக்கழகங்கள் மூடல் மற்றும் பாடசாலைகளின் வேலை நேரம் குறைப்பு போன்ற கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

மேலும், சர்வதேச விமானங்களுக்கு எரிபொருள் வழங்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஏர் கனடா நிறுவனம் தனது கியூபா சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் மற்றும் ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் ஆகியோர் அங்கு நிலவும் மனிதாபிமான நெருக்கடி குறித்துக் கவலை வெளியிட்டுள்ளனர்.

மேலும், அமெரிக்காவின் இந்த நடவடிக்கையானது கியூபா மக்களின் மன உறுதியை உடைக்க எடுக்கப்படும் கொடூரமான ஆக்கிரமிப்பு என அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் புருனோ ரோட்ரிக்ஸ் சாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top