மறைந்த அலி அயத்துல்லா கமேனியின் மகன் மோஜ்தபா கமேனி ஈரானின் புதிய உச்ச தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஈரான் இண்டெர்நேஷனல் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஈரானின் அணுஆயுத கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் சேர்த்து கடந்த சனிக்கிழமை அதிரடி தாக்குதல் நடத்தியது.
ஈரானின் மிகவும் பாதுகாப்பான வான்பாதுகாப்பு அமைப்புகளையும் மீறி, அந்த நாட்டின் மிக முக்கியமான அரசியல் மற்றும் நிர்வாக மையமான தலைநகர் தெஹ்ரானில் உள்ள பாஸ்டர் தெருவில் உள்ள மதகுருவின் மாளிகையில் நடத்தப்பட்ட கூட்டுத் தாக்குதலில் ஈரானின் மதகுரு அலி அயத்துல்லா கமேனி உள்பட ஈரானின் முக்கியத்துவம் வாய்ந்த 40-க்கும் மேற்பட்ட தலைவர்கள் கொல்லப்பட்டனர். கமேனி மட்டுமின்றி, அவரது மனைவி, மகள், மருமகன், பேத்தி உள்ளிட்டோரும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
இதனிடையே ஈரானின் புதிய உச்ச தலைவர் யார் என்பதில் ஏற்பட்ட குழப்பத்தில், நாட்டில் உள்ள நிபுணர்கள் சபையே புதிய உச்ச தலைவரைத் தேர்வு செய்யும். அதன்படி, ஈரான் இடைக்கால உச்ச தலைவராக அலிரேசா அராஃபி கடந்த சில நாள்களுக்கு முன்பு நியமனம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், ஈரானின் புதிய உச்சத் தலைவராக மறைந்த அலி அயத்துல்லா கமேனியின் இரண்டாவது மகன் மோஜ்தபா கமேனி, ஈரானின் புதிய உச்ச தலைவராக ஈரான் நிபுணர்கள் சபையால் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கமேனியின் நீண்டகால வாரிசாக கருதப்பட்ட மோஜ்தபா (56), ஈரானின் முழுக் கட்டுப்பாட்டையும் ஏற்க தேர்வு செய்யப்பட்டுள்ளார். வாரிசு அரசியலை நீண்டகாலமாக எதிர்த்து வரும் ஈரான் அரசு, தந்தைக்குப் பின்னர் மகனைத் தேர்வு செய்திருப்பது அரசின் கொள்கை குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. மோஜ்தபாவை ஆதரிக்க மதகுருமார்களின் குழுவை இஸ்லாமிய புரட்சி பாதுகாப்புப் படை கடுமையான அழுத்தம் கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
