News

ஈரானுக்கு விரைவில் பதிலடி; தயார்நிலையில் ராணுவம்! – அஜர்பைஜான் அறிவிப்பு!

ஈரானின் ட்ரோன் தாக்குதலுக்கு விரைவில் பதிலடி கொடுக்கப்படும் என அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் அறிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து அண்டை நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்காவின் ராணுவத் தளங்கள் மற்றும் முக்கிய கட்டமைப்புகள் மீது ஈரான் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இதனைத் தொடர்ந்து, அஜர்பைஜானில் உள்ள ஒரு விமான நிலையம் மற்றும் பள்ளிக்கூடத்தின் அருகில் வியாழக்கிழமை (மார்ச் 5) ஈரான் மேற்கொண்ட ட்ரோன் தாக்குதல்களில் 4 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த நிலையில், ஈரான் பயங்கரவாதத் தாக்குதல் மேற்கொண்டதாகக் குற்றம்சாட்டிய அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ், அதற்கு விரைவில் பதிலடி கொடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.

இதுபற்றி, அதிபர் இல்ஹாம் அலியேவ் கூறியதாவது:

“இன்று ஈரான் அஜர்பைஜான் பகுதியின் மீது பயங்கரவாத நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பதிலடி கொடுப்பதற்கும், எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் தயார்நிலையில் இருக்குமாறு அஜர்பைஜான் ராணுவத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.

இதையடுத்து, மத்திய கிழக்கு நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தொடர் தாக்குதல் மேற்கொண்டு வருவதால் அங்கு மிகவும் பதற்றமான சூழல் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top