லண்டனில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் இரண்டு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
லண்டனின் பார்னெட்(Barnet) பகுதியில் ஹய்ஃபீல்ட் அவென்யூவில் புதன்கிழமை காலை சுமார் 11:16 மணி அளவில் நடந்த பயங்கர கத்திக்குத்து சம்பவத்தில் இரண்டு பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.
தகவலறிந்த உள்ளூர் பொலிஸ் அதிகாரிகள், சிறப்பு ஆயுதப் படையினர் மற்றும் ஆம்புலன்ஸ் சேவையினர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
அங்கு படுகாயமடைந்து இருந்த இருவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அதிகாரிகள், சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
அப்போது, சம்பவ இடத்திற்கு அருகிலேயே சுற்றித்திரிந்த சந்தேக நபர் பொலிஸ் அதிகாரிகளையும் கத்தியால் குத்த முயற்சித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து 45 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரை டேசர்(Taser) துப்பாக்கியை பயன்படுத்தி நிலைகுலைய செய்து பின்னர் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபரின் பின்னணி மற்றும் குடியுரிமை குறித்த விவரங்களை பொலிஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
