ஆபிரிக்க பிராந்தியத்தில் தற்போது அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் அரிய வகை ‘பண்டிபுஜியோ’ எபோலா வைரஸ் பரவலுக்கு எதிரான தடுப்பூசியை முழுமையாக உருவாக்குவதற்கு இன்னும் 9 மாதங்கள் வரை ஆகலாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
எபோலா வைரஸ் வகைக்கு எதிராக இரண்டு சாத்தியமான தடுப்பூசி மாதிரிகள் உருவாக்கப்பட்டு வருகின்றபோதிலும், அவை இன்னும் மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவில்லை என உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசகர் டாக்டர் வசீ மூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுவரை 600க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், இந்த நோயினால் மரணங்களின் எண்ணிக்கை 139ஆக உயர்ந்துள்ளது.
வைரஸ் தொற்றைக் கண்டறிவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரேயேசுஸ் கவலை வெளியிட்டுள்ளார்.
முதலாவது தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்ட கொங்கோவில் 51 பேருக்கு தற்போது எபோலா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அண்டை நாடான உகண்டாவின் தலைநகர் கம்பாலாவில் கொங்கோவில் இருந்து பயணித்த இருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொங்கோவின் கிழக்கு இத்தூரி காணமே இந்த வைரஸ் பரவலின் மையப்பகுதியாகக் அடையாளம் காணப்பட்டுள்ளது.
நிலைமையின் தீவிரத்தைக் கருத்திற்கொண்டு, உலக சுகாதார நிறுவனம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (17) சர்வதேச கவலைக்குரிய பொது சுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்தியிருந்தது. எனினும், இது உலகளாவிய ரீதியில் ஒரு பெருந்தொற்று அல்ல என்றும், தேசிய மற்றும் பிராந்திய மட்டங்களிலேயே இதன் ஆபத்து அதிகமாகக் காணப்படுவதாகவும் டெட்ரோஸ் தெளிவுபடுத்தியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள் நோயாளர்களால் நிரம்பி வழிவதாகவும், போதிய தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி சுகாதாரப் பணியாளர்கள் பெரும் ஆபத்தான சூழலில் பணியாற்றி வருவதாகவும் எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக பிரித்தானிய அரசாங்கம் 20 மில்லியன் பவுண்டுகள் நிதி உதவியை அறிவித்துள்ளது.
சுமார் ஒரு தசாப்த காலத்துக்குப் பின்னரே இந்த பண்டிபுஜியோ எபோலா வகை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. பரவலாகக் காணப்படும் ‘சைர்’ எபோலா வகையை விட இது வீரியம் குறைந்ததாகக் கருதப்பட்டாலும், இதற்கென அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது பிரத்தியேக மருந்துகளோ தற்சமயம் இல்லாததே தற்போதைய சுகாதார நெருக்கடிக்கு முதன்மைக் காரணமாகும்.
