அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள ஹோவார்டு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் விருந்தினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். இதன்படி, இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி நேற்றிரவு நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன.
இந்நிலையில், நேற்றிரவு 8.23 மணியளவில் ஹோவார்டு பல்கலைக்கழகத்திற்கு வெளியே திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் பலர் தாக்கப்பட்டனர். எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர் என்பதுபற்றி அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. எனினும், 4 பேர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு இருக்கும் என தெரிகிறது. ஒருவர் பலத்த காயமடைந்து உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர். இந்த துப்பாக்கி சூட்டுக்கான உள்நோக்கம் என்னவென தெரிய வரவில்லை. அந்த பகுதியை தங்களுடைய கட்டுக்குள் கொண்டு வந்த போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
