ஈரானின் அணுசக்தி உரிமைகள் தொடர்பாக வாஷிங்டன் மற்றும் டெஹ்ரான் இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஈரானிய மாணவர் செய்தி முகமை (ISNA)க்கு வழங்கிய பேட்டியில், அமெரிக்காவின் அழுத்தங்கள் குறித்து அவர் கேள்வி எழுப்பினார்.
“ஈரான் தனது அணுசக்தி உரிமைகளைப் பயன்படுத்தக் கூடாது என்று ட்ரம்ப் கூறுகிறார். ஆனால் எந்த அடிப்படையில் அவர் இதைச் சொல்கிறார் என்பது தெளிவாக இல்லை. ஒரு தேசத்தின் உரிமைகளைப் பறிக்க அவர் யார்?” என அவர் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே அணுசக்தி ஒப்பந்தம் மற்றும் பொருளாதாரத் தடைகள் தொடர்பாக நீண்டகாலமாக இழுபறி நிலை நீடித்து வருகிறது.
ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதைத் தடுக்கவே தாங்கள் முயற்சிப்பதாக வாஷிங்டன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
மறுபுறம், தங்களது அணுசக்தித் திட்டம் அமைதிப் பயன்பாட்டிற்கானது—மின்சாரம் மற்றும் மருத்துவத் தேவைகளுக்காக மட்டுமே எனவும், அதைத் தடுக்க யாருக்கும் உரிமையில்லை எனவும் ஈரான் வாதிடுகிறது.
மத்திய கிழக்கில் ஏற்கனவே நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரான் அதிபரின் இந்த நேரடி விமர்சனம் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
குறிப்பாக, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஈரானின் அணுசக்தி திட்டங்களை கட்டுப்படுத்த முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், தங்களது உரிமையை விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்ற நிலைப்பாட்டை ஈரான் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
