News

கப்பல் சிறைபிடிப்பு – அமெரிக்காவிற்குத் தகுந்த பதிலடி நிச்சயம்: ஈரானின் பகிரங்க எச்சரிக்கை

ஓமன் வளைகுடாவில் ஈரானியக் கப்பலை அமெரிக்கக் கடற்படை சிறைபிடித்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த தகவலை ஈரான் மறுத்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தநிலையில், ஈரானிய வணிகக் கப்பல் ஒன்றைக் கடத்தும் முயற்சியில் ஈடுபட்ட அமெரிக்க பயங்கரவாதப் படைகளை ஈரானியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) வெற்றிகரமாக விரட்டியடித்ததாக ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓமன் வளைகுடா பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படைகள், ஈரானிய வணிகக் கப்பலை வழிமறித்துத் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளன.

ஈரானியக் கப்பலை அதன் எல்லைக்குள் மீண்டும் விரட்டும் நோக்கில் அமெரிக்கா இந்தத் தாக்குதலை நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், தகவல் அறிந்தவுடன் IRGC இன் கடற்படைப் பிரிவுகள் அதிவேகமாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அமெரிக்கப் படைகளுக்குப் பதிலடி கொடுத்ததாக ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானியப் படைகளின் இந்தத் தலையீட்டால், அமெரிக்கக் கடற்படையினர் அங்கிருந்து பின்வாங்கி ஓட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈரானிய வணிகக் கப்பலான டூஸ்காவை அமெரிக்கப் படைகள் கைப்பற்றியதை ஈரானின் ஹஸ்ரத் கதம் அல்-அன்பியா இராணுவத் தலைமையகம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

ஓமன் கடல் பகுதியில் அமைதியாகச் சென்ற கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திச் சட்டவிரோதமாகக் கைப்பற்றியதை ஆயுதமேந்திய கடல் கொள்ளை என ஈரான் சாடியுள்ளது.

முன்னதாக அமெரிக்கப் படைகளை விரட்டியடித்ததாகக் கூறி வந்த ஈரானிய ஊடகங்கள், தற்போது கப்பல் பறிபோனதை ஒப்புக்கொண்டுள்ளன.

இந்த நடவடிக்கை சர்வதேச கடல்சார் விதிகளையும் போர்நிறுத்த உடன்படிக்கையையும் அப்பட்டமாக மீறும் செயல் என்று ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

இச்சம்பவத்திற்கு விரைவில் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளதால் ஓமன் வளைகுடா மற்றும் ஹார்முஸ் நீரிணைப் பகுதிகளில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top