ரஷியாவால் திருடப்பட்ட உக்ரைன் நாட்டு உணவு தானியங்களை இஸ்ரேல் வாங்குவதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.
2022ல் போர் தொடங்கியதில் இருந்தே உக்ரைனில் ரஷ்யா ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் இருந்து தானியங்களைக் கொள்ளையடித்து, அவற்றை ரஷியா மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாக உக்ரைன் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
இந்நிலையில் உக்ரைனிடமிருந்து திருடப்பட்ட தானியங்களை ஏற்றி சென்ற ரஷிய கப்பல் ஒன்று இஸ்ரேல் துறைமுகத்தை சென்றடைந்துள்ளது. இது முற்றிலும் சட்டவிரோதமான செயல் என்று ஜெலென்ஸ்கி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
துறைமுகத்திற்கு செல்லும் கப்பலில் உள்ள தானியங்கள் யாருக்குச் சொந்தமானது என்பது இஸ்ரேல் அதிகாரிகளுக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுபோன்ற திருடப்பட்ட பொருட்களை வாங்கி லாபம் ஈட்ட முயற்சிப்பவர்கள் மீது உக்ரைன் அரசு கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்கத் தயாராகி வருகிறது.
இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சர் கிடியான் சார், ஜெலென்ஸ்கியின் இந்த விமர்சனத்தை “ட்விட்டர் ராஜதந்திரம்”என்று குறிப்பிட்டுள்ளார்.
தானியங்கள் திருடப்பட்டவை என்பதற்கான போதுமான ஆதாரங்களை உக்ரைன் வழங்கவில்லை என்றும், இருப்பினும் துறைமுகத்திற்கு வந்த கப்பல் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
